பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை (மாற்றுத்திறன் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய ஆண்டுதோறும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர்.

அதன்படி, வரும் கல்வியாண்டுக்கான (2023-24) பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணிகளை ஏப்ரல் 2-வது வாரம் முதல் மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அனைத்து வட்டாரங்களிலும் எந்தொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடுவாரியாக கணக்கெடுக்க வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்வது அவசியம்.

பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பிற துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி திட்டமிட வேண்டும். கணக்கெடுப்பின்போது கரோனா தொற்று காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

கணக்கெடுப்பின்போது கண்டறியப்படும் 6 முதல் 18 வயதுடைய குழந்தைகளை, அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE