சென்னை: முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் ஏப்.19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும்அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில்இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (‘க்யூட்’) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இதுதவிர மற்ற உயர்கல்வி நிறுவனங்களும் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு மே 21 முதல் 31-ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ தேர்வு குறித்து என்டிஏ வெளியிட்ட அறிவிப்பு: முதுநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக ஏப்.19-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டுவிளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.