பிளஸ் 2 மாணவர்கள் அகமதிப்பீடு மதிப்பெண் - பிப்.28-க்குள் பதிவேற்ற உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலை பிப்.28-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்ச் 13 முதல் செய்முறைத் தேர்வு: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் செய்முறைத் தேர்வு, வருகைப் பதிவு, இணைச் செயல்பாடுகள் தொடர்பான அகமதிப் பீட்டு மதிப்பெண்ணை மார்ச் 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அகமதிப்பீடு பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று (பிப்.17)முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பிப்.23 முதல் 28-ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதன்பின் அகமதிப் பீடு மதிப்பெண் பட்டியல்களை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் மார்ச் 2-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE