அரூர் புத்தகக் காட்சி: 5,000 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழாவில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் அரூர் அரிமா சங்கம், அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை இணைந்து மூன்றாம் ஆண்டு தருமபுரி மாவட்டம் அரூரில் புத்தகத் திருவிழாவை கடந்த 4-ம் தேதி முதல் நடத்தினர்.

மூன்றாவது மற்றும் இறுதி நாளாக இன்று நடைபெற்ற புத்தக திருவிழாவில் அரூர், பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தனியார், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்வமுடன் வந்திருந்தனர்.

பல்வேறு அரங்குகளில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்களின் நூல்கள் வைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கிராமப் பகுதியான அரூர் பகுதியில் நடைபெற்று வரும் கண்காட்சியை காண வருகை தந்த பள்ளி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தை பொதுமக்களும் ஆசிரியர்களும் வியந்து பாராட்டினர்.

- எஸ்.செந்தில்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE