50,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் பச்சை வால் நட்சத்திரம்: 4 மாதங்களுக்கு வானில் பார்க்கலாம்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் வரும் பச்சை வால் நட்சத்திரத்தை நாளை (பிப்.1) முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி தெரிவித்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. இந்த வால் நட்சத்திரம் ஜன.12-ம் தேதி சூரியனைக் கடந்து நாளை (பிப்.1) பூமிக்கு மிக அண்மையில் வரும்.

அதாவது, கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதை தொலைநோக்கி உதவியின்றி வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இந்த வால் நட்சத்திரத்தை நிறநிரல்மானி (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் பிப்.1-ம் தேதி காலை 4 மணி வரை இந்த நட்சத்திரத்தை பார்க்க முடியும். தொடர்ந்து, அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE