கோவை: முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, நடப்பாண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை 2022-23-ம் கல்வியாண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டொன்றுக்கு ரூ.2,000 வீதமும், 6-ம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை ஆண்டொன்றுக்கு ரூ.4,000 வீதமும், 9-ம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்புக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,000 வீதமும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகையை கேட்டு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.