முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு நவ.14-ல் வகுப்பு தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவ.14 முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு முடிய உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்புகள் நவ.14-ம் தேதியும், பாட வகுப்புகள் நவ.28-ம் தேதியும் தொடங்குகிறது. முதல் பருவத்துக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு மார்ச் 23.

முதல் பருவத்துக்கான செய்முறைத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 25-ம் தேதியும், எழுத்துத் தேர்வுகள் ஏப். 5-ம் தேதியும் தொடங்கும். 2-ம் பருவத்துக்கான வகுப்பு மே 15-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் அக். 27-ல் தொடங்கி நடந்துவருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவர்களின் பாடப்பிரிவு, கல்லூரி, துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE