சென்னை: தமிழகத்தில் ஆயுர்வேதா, யுனானி,ஓமியோபதி துறைகளை மேம்படுத்தும் வகையில், அக்கல்லுாரி முதல்வர்கள் இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநராக ஐஏஎஸ் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதேநேரம், இணை இயக்குநர்களாக, சித்தா மற்றும் யோகா துறைகளில் இருந்து தான் நியமிக்கப்படுகின்றனர். அலோபதி மருந்துக்கு, சித்தா மருத்துவ முறை தான் 90 சதவீதம் மாற்றாக பார்க்கப்படுகிறது. ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி சிகிச்சை முறைகள் தமிழகத்தில் பெரியளவில் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சித்தா, யோகா மருத்துவ முறைகளைப்போல், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி துறைகளையும் மேம்படுத்தும் வகையில், தனித்தனி இணை இயக்குநர்கள் நியமிக்க வேண்டும் என அத்துறைகளின் மருத்துவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்றுதமிழக சுகாதாரத்துறை இயக்குநர்சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கல்லுாரிகளின் முதல்வர்கள், அத்துறையின் இணை இயக்குநர்களாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.