அரசு பள்ளி ஆசிரியருக்கு அவமதிப்பு: விருதுநகர் ஆட்சியருக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவமரியாதை செய்ததாகக் கூறி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் இன்று (செப்.21) வெளியிட்ட அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது, ஓர் ஆசிரியரை விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறி அனைவரின் முன்பும் பொது சமூகத்திலும், தவறான முறையில் சித்தரித்து ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர்களை திட்டுவதும் அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதும் சுதந்திரமற்ற முறையில் கட்டளைக்கு கீழ்படி, இதுதான் சரியான கல்வி முறை, இப்படித்தான் தேர்வும், செய்முறைகளும், பாடம் கற்பித்தலும் இருக்க வேண்டும் என்று அலுவலர் பணியில் இருப்பது போன்று ஆசிரியர் பணியில் செய்ய முடியுமா? என்பதை சமூகமும் கல்வியாளர்களும் அரசும் சிந்திக்க வேண்டும். கல்வி கட்டமைப்பு என்பது எவ்வகையில் மாணவர்களின் உளவியல், மனதில் இருந்து புரிதலை உண்டாக்கி கற்றலை வெளிப்படுத்தும், என்று ஒரு உயர் அலுவலர் சொல்லக்கூடிய முறை எப்படி சரியானதாக அமையும்?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு என்ற பெயரில் சரிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆசிரியர்களையும் அலுவலர்களையும் தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறார். எனவே, தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உடனடியாக இதில் தலையிட்டு விருதுநகர் மாவட்டத்தில் கற்றல் கற்பித்தல் பணிகளை ஆசிரியர்கள் சுமுகமாகவும் மகிழ்ச்சியுடனும் மேற்கொள்ளவும், ஆசிரியர்களை அவ மரியாதையாக பேசிய மாவட்ட ஆட்சியரின் மீது விசாரணை கமிட்டி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் இவ்வகையான நிகழ்வுகளில் தொடர்ந்து மவுனம் காத்தால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் அரசுக்கு எதிராக சுயமரியாதை மீட்பு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE