விருதுநகர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (செப்.14) நடைபெறும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 98 மையங்களில் 27,100 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் 20-ம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ-வில் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 2,327 காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 98 தேர்வு மைங்களில் 27,100 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்க தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும்படை மற்றும் ஆய்வு அலுவலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்வுக் கூடத்துக்குள் தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது.