சென்னை பல்கலை. 166-வது பட்டமளிப்பு விழா: செப்டம்பர் 4 - வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. துணை வேந்தர்கள் இல்லாததால் தமிழக அரசு அமைத்துள்ள ஒருங்கிணைப்பு குழுக்கள்தான் அந்தந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகின்றன.

இதனால் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் 50 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிதலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகஆளுநர் மாளிகை கடந்த ஆகஸ்ட்22-ம் தேதி வெளியிட்ட ஓர் அறிவிப்பில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப். 4-வது வாரம்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.ஏழுமலை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4-வது வாரம் நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக தகவல் மையத்தில்ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் (www.unom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப். 14-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE