சென்னை: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர்மணிஷ் ஆர்.ஜோஷி, அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் (என்ஏடிஎஸ்) பட்டம், பட்டயம், தொழிற்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் 6 மாதம் முதல் ஓராண்டு வரை பணித்திறன் பயிற்சி (அப்ரண்டிஸ்) வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் முன்னேற்றமாக என்ஏடிஎஸ் 2.0 போர்டல் தளம் (/nats.education.gov.in/) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கான பணித்திறன் பயிற்சிக்கான வாய்ப்புகள் விரிவுப்படுத்தப்படும். இதில் பயிற்சி தொடர்பான செயல்பாடுகள், விண்ணப்பப் பதிவு, வேலை வாய்ப்புகள் குறித்த விளம்பரங்கள், ஒப்பந்தங்களை மேற்கொள்வது, சான்றிதழ் வழங்குவது, உதவித் தொகை வழங்குதல் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், பணி வழங்குவோரை இணைக்கும் பாலமாக இந்த புதிய தளம் இருக்கும். சிறந்த முறையில் பணித்திறன் பயிற்சிகளை வழங்கவும், அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உதவும். எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் என்ஏடிஎஸ் 2.0 தளத்தில் பதிவு செய்துகொண்டு, தங்கள் மாணவர்களுக்கு பணித்திறன் பயிற்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.