7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு விவசாயி மகள் சுவேதா தேர்வு!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருச்சுழி அருகே உள்ள மைலி இலுப்பைக்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (40). இவர்களது இளைய மகள் சுவேதா (18). இலுப்பைகுளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து 9 முதல் பிளஸ்-2 வரை படித்து தேர்ச்சி பெற்றார். இலுப்பைகுளம் கிராமத்திலிருந்து தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்து, பின்னர் அங்கிருந்து பேருந்தில் பள்ளி வந்து செல்வார். பிளஸ்-2 வில் 600 க்கு 555 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்கிற லட்சிய கனவில் இருந்து வந்த மாணவி சுவேதா மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுத தயாரானார். இதற்காக கடந்த ஓராண்டாக சேலத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார். 720 க்கு 531 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க தகுதி பெற்றார். கடந்த 22-ம் தேதி சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் தனது சொந்த மாவட்டமான விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியிலேயே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க தகுதி பெற்று தேர்வானார்.

இதுகுறித்து மாணவி சுவேதா கூறுகையில், “எனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையிலும் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். ஆனாலும், பெற்றோருக்கு உதவியாக வயல் வேலைகளையும் செய்து வந்தேன். அதேவேளையில் படிப்பிலும் முழு கவனம் செலுத்தி விடாமுயற்சியுடன் படித்து வந்தேன். மேலும் எனது கிராமத்தில் போதிய விழிப்புணர்வு இன்றி பெண் குழந்தைகளை அதிகம் படிக்க வைப்பதில்லை.

மாறாக சீக்கிரமாகவே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. நான் நன்றாக படித்ததால் பெற்றோர் எனக்கு ஊக்கமளித்து பக்கபலமாக இருந்தனர். அதனால்தான் வெளியூர் சென்று நீட் தேர்வுக்கு படிக்க முடிந்தது. தொடர் பயிற்சியால் தேர்வெழுதி வெற்றிபெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியிலேயே மருத்துவம் படிக்க தகுதி பெற முடிந்தது. மருத்துவம் படித்து கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ சேவையாற்றுவதே எனது லட்சியம்” என்று மாணவி சுவேதா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE