10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித் தேர்வர்கள் செப்.20 வரை பதியலாம்

By சி.பிரதாப்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித் தேர்வர்கள் செப்.20-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: 'நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் நேரடித் தனித் தேர்வர்களும், ஏற்கெனவே தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் தற்போது பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும். அதன்படி தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை அணுகி ரூ.125 கட்டணம் செலுத்தி செப்டம்பர் 2 முதல் 20-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்போது பதிவு செய்தவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள், மையம் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயக்குநரகத்தால் பின்னர் வாய்ப்புகள் வழங்கப்படும்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களின் முடிவுகளை தேர்வுத் துறை இன்று மதியம் வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களின் விடைத்தாழ்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE