சென்னை: நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு, ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என என்டிஏ தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. அவற்றை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.