முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்தசுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள்விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் திடீரென முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வரும் 11-ம் தேதி காலை, மதியம் எனஇரண்டு ஷிப்ட்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த 4 விருப்ப தேர்வு மையங்களைஒதுக்காமல் 750 கிமீ முதல் 1,000கிமீ தொலைவில் ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதற்கு தேர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேர்வர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் எனஅரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழக தேர்வர்களுக்கு, தமிழகத்தில் அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். இதேபோல், மற்ற மாநிலங்களின் எம்.பி.க்களும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தேர்வர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தமிழகத்தில் அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை தேசிய மருத்துவஅறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் இமெயில் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE