மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

By சி.பிரதாப்

சென்னை: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இன்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; "மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்யவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம்-2016 கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் கிடைக்கிறதா என்பது உறுதி செய்யப்படுவதுடன், அதற்குரிய விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது. இது சார்ந்து கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் 2019-20 முதல் 2023-24-ம் கல்வியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்கள், கற்பித்தல் பணிகளில் உள்ள ஆசிரியர்கள், இதர பணியிடங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோரின் தகவல்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித் தொகைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் அறிக்கையை https://uamp.ugc.ac.in/ என்ற இணையதள முகவரிக்கு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காலதாமதமின்றி பணிகளை உடனடி முடிக்க வேண்டும்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE