சென்னை: பிபிஏ, பிசிஏ படிப்புகளை பயிற்றுவிக்க அங்கீகாரம் கோரிய கல்லூரிகளின் 4,800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "2024 - 25-ம் கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇ-யின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை பெற முடியும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவானது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டன. அந்த வகையில் நடப்பாண்டு பிபிஏ, பிசிஏ படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரப்பட்ட கல்லூரிகளின் 4,800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (ஜூலை 26) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, விருப்பமுள்ள கல்லூரிகள் www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்" என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.