தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

By சி.பிரதாப்

சென்னை: தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜூலை 29-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கமும், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்கள் பலர் எமிஸ் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டு 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE