தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமேற்படிப்பு சேர்க்கை ரத்து

By இல.ராஜகோபால்

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டமேற்படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலைப் பட்டமேற்படிப்புப் பயிலகமானது தனது 11 உறுப்புக் கல்லூரிகளின் வாயிலாக 33 துறைகளில் முதுநிலைப் படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்குகிறது.

இந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2024 மே 8-ம் தேதி முதல் பெறப்பட்டு அதற்கான நுழைவுத்தேர்வு 2024 ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வுக்கு 2,881 விண்ணப்பங்களை பல்வேறு மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் இருந்து, இளநிலை படிப்பை முடிப்பதில் வெவ்வேறு நிலைகளில் உள்ள, மாணவ மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் பெரும்பாலான மாணவ மாணவியர் தங்களது இளநிலை பட்டப்படிப்பை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிக்க இயலும் என்றும், அதனால் இந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கால தாமதமாக இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களினை தவிர்க்கும் விதமாக நடப்பு ஆண்டில் மே மாதம் துவங்கப்பட்ட முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது.

விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவர் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும். புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE