சென்னை: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப்போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் இன்று அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருவோரை ஊக்குவிக்கவும், அதன் அடிப்படையில் பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, பாராட்டுச்சான்று வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறையின் 2022-2023-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்காக ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் வழங்கியுள்ளார். இத்தொகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்.
அதேபோல், 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் ஜூலை 31-ம் தேதிக்குள் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகளை நடத்தி ரொக்கப் பரிசுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» பள்ளி பாடப் புத்தகங்கள் அனைத்தும் ஜூலைக்குள் கிடைக்கும்: என்சிஇஆர்டி விளக்கம்
» விக்கிரவாண்டி: வாக்குச்சாவடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது