பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை (புதன்) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்நிலையில், நடப்பு கல்விஆண்டில் (2024-25) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்திருந்த போதிலும், அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.

அவர்களுக்கு ஜுன் 12-ம் தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறப்பு இணையதளம்: இதைத்தொடர்ந்து, ஜுன் 13முதல் 30-ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை (புதன்) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநிலதொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.

மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இணையதளத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில்.. தரவரிசைப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து, விருப்பமானகல்லூரி மற்றும் பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு நடத்தப்படும். மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு ஆகஸ்ட் முதல்வாரத்தில் பொறியியல் கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE