நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் முன்பு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்து படித்து வந்தனர். தற்போது நந்தனம் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

எனவே, 2024-25-ம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், நந்தனம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், கல்லூரி ஆட்சிமன்றக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி அதன் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் என்று மாற்றி ஆணை வழங்குமாறு அக்கல்லூரியின் முதல்வர் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்.

அக்கருத்துருவை ஆய்வுசெய்து நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியை 2024-25-ம் கல்வியாண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றியும், அக்கல்லூரியின் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் எனப் பெயர் மாற்றியும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE