அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த 915 இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் பணிநிரவல்

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த 915 இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு தேவையுள்ள இதர பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்படுவர்.

அதன்படி 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கல்வியாண்டு முடிவில் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சேர்க்கையை கணக்கில் கொண்டு உபரி பணியிடங்கள் மறுவரையறை செய்யப்பட்டன. அதில் மே 31-ம் தேதி நிலவரப்படி உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை 1,862 ஆக இறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உபரியாக உள்ள 1,862 ஆசிரியர்களுக்கான முதல்கட்ட பணிநிரவல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. ஒன்றியளவில் நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வில் 915 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டனர். இந்த பணிநிரவலால் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பூர்த்தியடையும்.

மேலும், உபரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணிபுரிவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டதும் 2-ம் கட்டமாக பணிநிரவல் மேற்கொள்ளப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE