சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கள்) தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி. பி.காம்., பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 2024 - 2025-ம் கல்வியாண்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி முடிவடைந்தது. 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30-ம் தேதி வரை அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடந்தது. இதில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான பொது பிரிவினருக்கான கலந்தாய் நாளை (திங்கள்) அந்தந்த கல்லூரிகளில் தொடங்குகிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இக்கலந்தாய்வு 15-ம் தேதி முடிவடையும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூலை 3-ம் தேதிதொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.