அரசு பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: ஜூலை 21-ம் தேதி நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் 9, 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும்,முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.

இந்த தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும். தேர்வெழுத விருப்பமுள்ளவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்11-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டணமாக ரூ.50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE