புதுச்சேரி: புதுச்சேரியில் நிலவும் வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்திருந்தது. நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு நாளில் நோட்டு புத்தகங்கள் சீருடை தர திட்டமிட்டு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், புதுச்சேரியில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகளவில் உள்ளது. இதனால், கல்வித் துறை பள்ளிகள் திறப்பை ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும், வெப்ப அலை காரணமாக வரும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.