பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள்இயக்குநர் எஸ்.சேதுராம வர்மாநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி,விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், 28-ம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணி முதல்அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்த விண்ணப்பத்தின் 2 நகல்கள் எடுத்து, அவற்றை உரிய கட்டணத்துடன் மே 29 முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும் .

மறுமதிப்பீடு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.505. மறுகூட்டல் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.205. உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE