அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (மே 27) வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் 2 லட்சத்து 11,010 மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதற்கிடையே கட்டணம் செலுத்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். அந்தவகையில் நடப்பாண்டு கலந்தாய்வில் 2.11 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த அரசுக் கல்லூரிகளுக்கு இன்று (மே 27) அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான விவரங்களை செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கல்லூரிகள் அளவிலான மாணவர் சேர்க்கை மே 28 முதல் ஜூன் 29-ம் தேதி வரை இருகட்டங்களாக நடத்தப்படும். இதில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி தொடங்கும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.tngasa.in/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106 / 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE