டிடெட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

By சி.பிரதாப்

சென்னை: தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 24 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,450 இடங்களும் உள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதையேற்று தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை அதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30-ம் தேதிக்குள் பெற்று, அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மேலும், மதிப்பெண், சாதிவாரியாக மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி தேர்வு செய்யப்படுவர். அதன்பின் வகுப்புகள் ஜூன் 14-ம் தேதி தொடங்கி நடைபெறும். தொடர்ந்து மாணவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப்படும். மேலும், பொதுத் தேர்வானது ஜூன், மே மாதம் நடைபெறும்.

இதுதவிர அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம். அதேபோல், நடப்பாண்டு டிடெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையானது ஒரு மாதம் முன்பாக ஜூனிலேயே நடத்தப்படும். அதற்கேற்ப கல்வியாண்டு ஜூன் முதல் மே வரை மேற்கொள்ளப்படும். எனினும். வழக்கம்போல் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை முதல் ஜூன் வரையே கல்வியாண்டு அமையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE