அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை இடங்களை உயர்த்த பரிசீலனை: அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்து வருவதால், சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையவழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 20) முடிகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதி இல்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். இதுதொடர்பாக சந்தேகம் இருந்தால் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

கடந்த சில ஆண்டுகளாக, கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் காரணமாக, கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அரசு கல்லூரிகளில் சேர 2.50 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்தம் உள்ள சேர்க்கை இடங்களைவிட 1.5 மடங்கு அதிகம்.

இதை கருத்தில் கொண்டு, சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் வரை உயர்த்த உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதற்கான பரிந்துரை அறிக்கையை தயாரித்து அரசின் ஒப்புதல் பெற்று தேவைக்கேற்ப இடங்களை உயர்த்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் வணிகவியல், ஆங்கிலம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE