எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் உயர் ரத்த அழுத்த மேலாண்மை குறித்த ஓராண்டு பயிற்சி படிப்பு தொடக்கம்

By சி.கண்ணன்

சென்னை: கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை குறித்த ஓராண்டு குறித்த பயிற்சி படிப்பு தொடங்கப்படுகிறது.

உலக உயர் ரத்த அழுத்த தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, தனக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் 4 பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 12 சதவீதம் பேர் மட்டுமே ரத்த அழுத்ததை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் பாதிப்புக்குள்ளானவர்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிக ரத்த அழுத்தம், இதயத்துக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும் அளவைக் குறைக்கும்.

இதன் மூலமாக, நெஞ்சுவலி, மாரடைப்பு, இதய செலிழப்பு, மாறுபட்ட இதய துடிப்பு, திடீர் மரணம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைப்பிடித்தல், மது குடித்தல், காற்று, தண்ணீர், ஒலி, ஒளி மாசு ஆகியவற்றின் மூலமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில், ‘உயர் ரத்த அழுத்த மேலாண்மை’ தொடர்பான ஓராண்டு பயிற்சி படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் திறமையான உயர் ரத்த அழுத்த சிகிச்சை நிபுணர்களை உருவாக்க முடியும்.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் வருகை பதிவு செய்யும் இடத்தில், நிரந்தரமாக உயர் ரத்த அழுத்த பரிசோதனை கருவி அமைக்கப் பட்டுள்ளது. பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்து, தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE