பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.17% பேர் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது (செவ்வாய்க்கிழமை, மே 14) வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவிகிதம். இதில் 4 லட்சத்து 4,143 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3 லட்சத்து 35,396 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் 7.43 சதவிகிதம் மாணவியர் தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. அரசுப் பள்ளிகள் பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் 85.75 சதவிகிதம். தமிழ் பாடத்தில் 8 பேர் சதம் (100 மதிப்பெண்கள்) எடுத்துள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 3,431 பேர் சதம் எடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள் மற்றும் 4,945 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில் 8 லட்சத்து 11,172 பேர் தேர்வு எழுதினர்.

இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE