பொறியியல் பருவ தேர்வுகள் ஜூன் 6-க்கு தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வு ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான நடப்பு பருவத்தேர்வுகள் மே 15-ம் தேதி தொடங்கிநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வு கால அட்டவணையும் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை மையங்கள்: இதற்கிடையே, 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் பொறியியல் கல்லூரிகள்தான் வாக்கு எண்ணிக்கை மையங்களாக உள்ளன.தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குவைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பலத்த போலீஸ் பாதுகாப்பும் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பொறியியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, தற்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் தொடங்கவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 6-ம் தேதி முதல் பருவத் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று பல்கலைகழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE