பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது: மாணவர்கள் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.50 லட்சம் இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு 2018-ம் ஆண்டு முதல் இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் கொ.வீரராக ராவ் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

பொறியியல் கலந்தாய்வுக்கான இணைய விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. மாணவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு சேவை மையங்கள் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அசல் சான்றிழ்களை பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 12-ம் தேதியுடன் நிறைவுபெறும்.

மாணவர்களின் சமவாய்ப்பு எண் ஜூன் 12-ம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.

இதையடுத்து, தரவரிசை பட்டியல் ஜூலை 10-ல் வெளியிடப்படும். அதில் தவறு இருந்தால் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் ஜூலை 11 முதல் 20-ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் சரிசெய்யப்படும். பின்னர், கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்வி ஆண்டு அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.

இதற்கிடையே, விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை மாணவர்கள்‌ தேர்வு செய்துவிட வேண்டும்‌. ஏனெனில், ஆவணங்களை இணையவழியில் சரிபார்க்கும்போது ஏதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, சம்பந்தப்பட்ட மாணவர் சேவை மையத்துக்கு நேரடியாக வந்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும். எனவே, விண்ணப்ப பதிவின்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ மட்டும் நேரடியாக நடைபெறும்‌.

இதுகுறித்து சந்தேகம் இருப்பின் 01800-425-0110 எனும் எண் அல்லது tneacare@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொறியியல் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே (மாலை 6 மணி நிலவரப்படி) 20,097 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 5,812 பேர் கட்டணமும் செலுத்தியுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE