நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுதமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மார்ச் 16-ம்தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் 23 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையே பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க என்டிஏ இறுதியாக 2 நாட்கள் (ஏப்.9, 10)வாய்ப்பு அளித்தது. அதைப் பயன்படுத்தி ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மீண்டும் அனுமதி: இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள என்டிஏ மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. பெயர், தேதி போன்ற பொதுவான தகவல்களில் திருத்தங்கள் இருப்பின் அவற்றை neet.nta.nic.inஎன்ற வலைதளம் வழியாக இன்றைக்குள் (ஏப்.12) செய்ய வேண்டும். ஆதார் எண் திருத்தங்களுக்கு ஏப்.15 வரை அவகாசமுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மேலும், இதுகுறித்த கூடுதல்தகவல்களை https://nta.ac.in/என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சந்தேகம் இருப்பின்011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE