சென்னை: தமிழகத்தில் 31,008 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில்1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: காலை உணவு வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுஉதவி பெறும் பள்ளிகளில், தனியாக உணவுப் பொருட்கள் வைக்கவும், சமையல் செய்வதற்கு தேவையான இட வசதியும் அமைத்துத் தரவேண்டும். திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட பள்ளிதாளாளர், தலைமை ஆசிரியர்கள் செய்துதர வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவுத் திட்டம் அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.