பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்காததால் பொது தேர்வில் தவறியவர் தேர்ச்சி பெற சலுகை

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் எழுத்து தேர்வில் (தியரி) மொத்தம் உள்ள 70 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று செய்முறை தேர்வு எழுதியிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, அகமதிப்பீடு, செய்முறை தேர்வு ஆகியவற்றில் மொத்தமாக100-க்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்’ என்று கடந்த 2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

கல்வி இணை மற்றும் புறச் செயல்பாடுகளுக்கு (வருகை பதிவு, இன்டர்னல், அசைன்மென்ட் அல்லது களப்பயணம்) அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2018-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

2017 அரசாணைப்படி, செய்முறைதேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சமதிப்பெண் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், செய்முறை தேர்வில்பங்கேற்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கெனவே தேர்வெழுதி எழுத்து தேர்வு, அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்தபட்சம் 35மதிப்பெண் பெற்றவர்கள், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாத சூழலில், தற்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதும். அதேநேரம், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 பெறாதவர்கள் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு இரண்டையும் மீண்டும் எழுத வேண்டும். இந்த அடிப்படையிலேயே கடந்த 2022-23 கல்வி ஆண்டு வரை தேர்வுகள் நடத்தப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநரின் பரிந்துரைப்படி, செய்முறை தேர்வில் பங்கேற்காமல் எழுத்து தேர்வில் 70 மதிப்பெண்ணுக்கு, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 15 பெற்றால், மீண்டும் செய்முறை தேர்வை மட்டும் எழுதினால் போதும். அரசு தேர்வுகள் இயக்குநரின் இந்த கோரிக்கைக்கு அரசு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE