பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான அங்கீகாரம்: விண்ணப்பிக்கும் அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-25 கல்வியாண்டுக்கான பிபிஏ,பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள், ஏஐசிடிஇ அனுமதி பெறும்நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை பெற முடியும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

100 உதவி மையங்கள்: உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் (மார்ச் 7) நிறைவு பெற இருந்தது. தற்போது கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைதளத்தில் சென்றுஅறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE