ராமேசுவரம்: திருமண விழாவுக்காக, முதுகுளத்தூர் வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் 3 பேர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நிதி அளித்தனர். முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று செந்தூர்பாண்டியனின் மகள் முஹாவிஜி என்பவருக்கு முதுகுளத்தூரில் திருமணம் நடை பெற்றது.
இத்திருமண விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர்களான கூலின், கான்மிங்க், டிம் ஆகிய மூன்று பேருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று மூவரும் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி சட்டையில் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் மணமகள் முஹாவிஜி பணியாற்றும் முது குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற மூவரும், பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையை பள்ளி தலைமை ஆசிரியை ஜோசப் விக்டோரியா ராணியிடம் வழங்கினர். இந்த சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.