சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை: 9 முதல் 12-ம் வகுப்புக்கு கொண்டுவர திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அலுவலர்கள் சிலர் கூறும்போது, ‘‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம்,கணிதம், அறிவியல் பாடங்களுக்கும், 11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம், உயிரியல்பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையைஅமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்ததேர்வுகளை நவம்பர், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக்குப்பின் பெறப்படும் கருத்துகள், பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டுஇத்திட்டம் அமல்படுத்தப்படும்.

கரோனா காலத்தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE