குறுகியகால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் அபய் ஜெரி வெளியிட்ட அறிவிப்பு:

சில தன்னம்பிக்கை பேச்சாளர்கள், 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்பு, உடனடி வகுப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய உடனடி எம்பிஏ படிப்புகள் (crash course) நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏஐசிடிஇ அனுமதியின்றி எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தக்கூடாது. எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலைப் படிப்பாகும். இது வணிகம் மற்றும் மேலாண்மைக் கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீன திறன்களை தனிநபர் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அதனால், எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது. மாணவர்கள் அத்தகைய தவறான, மோசடியாக தகவல்களை நம்பி, அந்த படிப்புகளில் சேரவேண்டாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://www.aicte-india.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE