மின்னொளி கணித ஆய்வகம்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழங்குடியின மாணவர்களுக்காக தலைமை ஆசிரியர் முன்முயற்சி!

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் பழங்குடியின சமூக மக்கள் மட்டுமே வசிக்கும் போதகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், ஆறு ஆசிரியர்கள், இரண்டு பகுதி நேர ஆசிரியர்கள் என எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 127 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தலைமையாசிரியர் இல்லாததால், பொறுப்பு தலைமை ஆசிரியராக கணித பட்டதாரி ஆசிரியர் பாரதி பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் முழுவதும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்ற பள்ளி என்பதால், ஆசிரியர் பாரதி பணியில் சேர்ந்த நாள் முதல் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. இதனையடுத்து அறிவியல் ஆய்வகங்கள் இருப்பதைப் போல, கணித ஆய்வகம் ஒன்று தனது சொந்த செலவில் பல்வேறு வண்ணங்களில், கணித வாய்ப்பாடுகள், சூத்திரங்கள், கணிதவியலாளர்கள் படம் வரைந்து, அவர்களின் தத்துவங்களையும் சுவர் முழுவதும் எழுதி வைத்துள்ளார்.

மேலும், மாணவர்களை கணிதம் குறித்து சார்ட் மற்றும் கற்றல் உபகரணங்களை தயார் செய்ய வைத்து, அதனை வகுப்பறைகள் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் வகுப்பறை முழுவதும், ஒவ்வொரு சூத்திரங்கள், அட்டவணைகள், வாய்ப்பாடுகள் போன்ற அனைத்துக்கும் ஒவ்வொரு விதமான மின்விளக்குகளை பொருத்தி, மாணவர்களை கவரும் வகை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அமர்ந்திருந்தால் கூட, பள்ளி கட்டிடத்தை பார்க்கின்ற பொழுது அதில் அவர்களுக்கு பயனுள்ள வகையில் வாய்ப்பாடுகள், சூத்திரங்கள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், மதிய உணவு உண்ணும் வகையில் இரண்டு கட்டிடங்களையும் இணைத்து மேற்கூறை,ரூ.5 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறையும்,இந்த கழிப்பறையில் ஓவியங்களை வரைந்தும், சோப்பு, சீப்பு, பவுடர், ஹேண்ட் வாஷ் கிரீம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களையும் வைத்து, மாணவர்களை அதை பயன்படுத்தும் பழக்கப்படுத்தி உள்ளார். .

மேலும் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளியின் தரத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக, தனது சொந்த செலவில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த பள்ளி உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE