சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) முதுநிலை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்னோ பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான பருவ இறுதி தேர்வு, டிச.1 முதல் அடுத்த ஆண்டு ஜன.9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை www.ignou.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கு வரும்போது பல்கலைக்கழகத்தின் புகைப்பட அடையாள அட்டையை மாணவர்கள் உடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். கூடுதல் விவரங்களை rcchennaiassignments@ignou.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும், 044-26618489 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.