கோவை: பெண்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் விதமாக இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ‘அஸ்மிதா' என்ற தலைப்பில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி ஆர்.இனியா, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் அவரது சகோதரியும், 8-ம் வகுப்பு மாணவியுமான ஆர்.இன்சிகா ஆகியோர் தலா ஒரு தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். பதக்கங்களை வென்ற இருவருக்கும் கராத்தே ஆசிரியர் பி.அமிர்தராஜ், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்கள் டி.கே.மாலதி, உமா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.