மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்கல்வி உதவித் தொகைக்கு 2023-24-ம் கல்வியாண்டில் புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரி ஆகிய வழிகளில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE