அஞ்சல் தினம்: மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு தபால் அட்டையில் கடிதம் எழுதும் பயிற்சி

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று பள்ளி மாணவர்களுக்கு தபால் அட்டையில் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கடிதம் எழுதும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா இன்று தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். இவ்விழாவில் ஓய்வுபெற்ற அஞ்சல் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அஞ்சல் தினம், அஞ்சலகத்தின் தேவை, அஞ்சலக பணியாளர்களின் உழைப்பு, அஞ்சலக பிரிவுகள், அஞ்சலக சேவைகள் குறித்து பேசினார்.

சமூக ஆர்வலர் அசோக்குமார், மாதிரி தபால் பெட்டியுடன் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். உலக தபால் தினம் குறித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தபால் அட்டை வழங்கப்பட்டு நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தபால் எழுதப் பழக்கப்பட்டது. ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுகுமாறன் நன்றி கூறினார். இவ்விழாவில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE