நிதி நெருக்கடியில் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் போதிய நிதி இல்லாததால் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை பெற முடியாமல் பேராசிரியர்கள் சிரமப்படுகின்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியில் 650-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க ரூ.10.50 கோடி தேவைப்படுகிறது.

ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பேராசிரியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியத் தொகை குறித்த நேரத்தில் வழங்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் துணைவேந்தர் ஜெ.குமாரிடம் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர், பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தாலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராசிரியர்கள், அலுவலர்கள் கூறியதாவது: இப்பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு நிர்வாக ரீதியாக சில பிரச்சினைகள் இருந்தபோதும், நிதி நெருக்கடியை சந்தித்தது இல்லை. அண்மைக் காலமாக பல்கலைக்கழகத்துக்கான வருவாயை அதிகரிப்பதில் நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது பொறுப்பிலுள்ள துணைவேந்தரும் அதற்கான முயற்சியை சரிவர மேற்கொள்ளவில்லை. இப்பல்கலைக்கழகத்தில் நிலுவையிலுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடிட் ஆட்சேபத்துக்கு நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக அரசிடமிருந்து தேவையான நிதியை பெற முடியவில்லை.

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை நம்பியே பெரும்பாலான பேராசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வூதியர்கள் உள்ளனர். இஎம்ஐ, ஓய்வூதியர்கள் மருத்துவ செலவினங்களுக்கென வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. குடும்பச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், சம்பளம் வழங்காதது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.

துணைவேந்தர், பதிவாளர் மற்றும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் நிதி நிலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE