சென்னை ஐஐடி-க்கு பசுமை வளாகத்துக்கான பிளாட்டினம் சான்றிதழ் - இந்திய பசுமை கட்டிடக் கவுன்சில் அங்கீகாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு நாட்டின் மிகப் பெரிய மற்றும் உயர்ந்த தரமதிப்பீடு உடைய பசுமை வளாகங்களில் ஒன்று என்பதற்கான பிளாட்டினம் சான்றிதழை வழங்கி இந்திய பசுமை கட்டிடக் கவுன்சில் அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: 'ஐஜிபிசி (Indian Green Building Council) பசுமை வளாகம்' என்பது இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் வளாகங்களில் நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை மேம்படுத்த இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) உருவாக்கிய மதிப்பீட்டு முறை மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டமாகும். நாளொன்றுக்கு இரண்டு டன் கலப்புக் கழிவுகளை செயலாக்கும் திறன் கொண்ட திடக்கழிவு எரியூட்டு வசதியை சென்னை ஐஐடி தனது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதரக் கழிவுகள் குப்பைக் கிடங்கை நிரப்ப எடுத்துச் செல்லப்படுகின்றன. சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, 19 செப்டம்பர் 2023 அன்று இந்த வசதியைத் தொடங்கி வைத்தார். நிலையான 'ஜீரோ வேஸ்ட் டிஸ்சார்ஜ்' அடைவதற்கான இக்கல்வி நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதாக இந்த வசதி அமைந்துள்ளது.

ஐஜிபிசி பிளாட்டினம் மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்) பேராசிரியை லிஜி பிலிப், "மிகச் சிறந்த இயற்கை வளத் திறன், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அளவீடுகள் வாயிலாக வளாகங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

நீடித்த இயற்கை அமைப்பு, போக்குவரத்து வசதிகள், விழிப்புணர்வு மற்றும் கல்வியில் ஆழ்ந்த கவனம் செலுத்துதல் போன்றவை இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பசுமை வளாக மதிப்பீடு நீண்டகாலச் செலவு சிக்கனத்திற்கு வழிவகுப்பது மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களின் நற்பெயரை உயர்த்தவும், சுற்றுச்சூழல் உணர்வுள்ள தனி நபர்களை ஈர்க்கவும் வழிவகுக்கிறது. மேலும், காலநிலை மாற்றம், வளங்களை அழித்தல் போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நிலையான எதிர்காலத்திற்கும் இது பங்களிப்பை வழங்குகிறது. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பொறுப்புடன் கூடிய இயற்கைவள மேலாண்மை மற்றும் பராமரிப்பை வலியுறுத்துகிறது.

611 ஏக்கர் பரப்பளவுடன் நாட்டின் மிகப் பெரிய வளாகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை ஐஐடி இந்த சாதனையை எட்டியிருப்பது பாராட்டத் தக்கதாகும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொறுப்பான வளாக மேம்பாடு ஆகியவற்றில் இக்கல்வி நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. பசுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பிற கல்விநிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அளவுகோலாக இந்த அங்கீகாரம் விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.

பிளாட்டினம் மதிப்பீடு என்பது இக்கல்வி நிறுவனம் மிகச் சிறந்த இயற்கை வளத் திறனையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் நிரூபித்திருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. தவிர, செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மட்டுமின்றி மதிப்புமிக்க வளங்களை பாதுகாக்கிறது. சென்னை ஐஐடி 90க்கு 82 புள்ளிகள் என்ற அபார மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. சென்னையின் 'நகர்ப்புற வெப்பத்தைத் தணிக்கும் தீவு' என்பதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாக ஐஐடி மெட்ராஸ் திகழ்வதாக புவியியல் பொறியாளர்கள் மேற்கொண்ட விரிவான டிஜிட்டல் இரட்டைப் பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிறுவனத்தில் உள்ள பரந்த வனப்பகுதி வெப்பத்தை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பதால், நகரின் இதர பகுதிகளைக் காட்டிலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. நகர்ப்புறங்களில் பசுமையான இடங்களின் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளை இந்த குளிர்ச்சியூட்டும் விளைவு எடுத்துக் காட்டுகிறது.

திடக்கழிவு எரிப்பு நிலையம்: திடக்கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் குறித்துப் பேசிய பேராசிரியை லிஜி பிலிப், "தற்போது இக்கல்வி நிறுவனத்தில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 4 டன் திடக்கழிவு உருவாகிறது. சேகரிக்கும் இடத்திலேயே கழிவுகள் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு பிரிக்கப்படும் கரிமக் கழிவுகள் உரமாகவோ, காற்றில்லா செரிமானமாகவோ மாற்றப்படுகின்றன. இங்கு ஒரு டன் திறன் கொண்ட 'பயோடைஜஸ்டர்' ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், 2 டன் திறன் கொண்ட மற்றொரு 'பயோடைஜஸ்டர்' அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் பயோகேஸ் இக்கல்வி நிறுவன விடுதியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கனிமக் கழிவுகள் மேலும் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், நாளொன்றுக்கு 300 முதல் 400 கிலோ அளவுக்கு கிடைக்கும் கலப்புக் கழிவுகள் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வசதிகளுடன், எங்களது வளாகம் 'பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற வளாக'மாக (ஜீரோ வேஸ்ட் டிஸ்சார்ஜ் கேம்பஸ்) இருக்கும். எரியூட்டி இயந்திரத்தில் இருந்து மீட்கும் ஆற்றலுக்கான மீட்பு அமைப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது நிலைத்தன்மை குறித்த இக்கல்வி நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது" எனக் குறிப்பிட்டார்.

இந்த வசதியின் தாக்கம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி-ன் வேதியியல் பொறியியல் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.வினு, "40 சதவீத ஈரப்பதம் வரை பிரிக்கப்படாத கழிவுகளையும் இந்த வசதி கையாளும் திறன் கொண்டது. உணவு/பேக்கேஜிங் கழிவுகள், பாதி உட்கொண்ட உணவுக் கழிவுகள், கோப்பைகள், அட்டைகள், பெரிய பேக்கேஜிங் பலகைகள், பயன்படுத்தப்பட்ட படுக்கைகள்/நுரைபடுக்கை ஆகியவற்றை எரிக்கப் பயன்படும். கலப்புக் கழிவுகளை எரிப்பதன் மூலம், இக்கல்வி நிறுவனம் 2 டன் அளவுக்கு Co2-eq GHG உமிழ்வைக் குறைக்கிறது. கழிவுகளை அகற்றுவதற்கான செலவுகளைக் குறைத்து அதன்மூலமும் இக்கல்வி நிறுவனம் பயன்பெறுகிறது. எதிர்காலத்தில் எரிசக்தி பிரித்தெடுத்தல் வாயிலாகவோ, எரிவாயு இயந்திரத்தைப் பயன்படுத்தியோ, கொதிகலன்- டர்பைன் அமைப்பைப் பயன்படுத்தியோ, மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

குப்பைகளை துண்டாக்கும் இயந்திரம்

குப்பைத் தொட்டியில் இருந்து துண்டாக்கும் இயந்திரத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும்போது, உருவில் பெரிதாக உள்ள உலோகங்கள், கண்ணாடித் துண்டுகள் போன்றவை கைகளால் எடுக்கப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. கலப்பு கரிமம்/உணவு+ பிளாஸ்டிக்+ அட்டைகள்+ பேக்கேஜிங் கழிவுகள் கலப்பு வடிவில் இருந்தால் ரோட்டரி உருளையில் எரிக்கப்படுகின்றன. சூடான ஃப்ளூ வாயுக்கள் சைக்ளோன் எந்திரத்தின் காற்றைப் பயன்படுத்தி குளிர்விக்கப்படுகின்றன.

இதனால் வாயுக்களைக் குளிர்விக்க தண்ணீரைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. வாயுக்கள் <150oC-க்கு குளிர்ந்த பிறகு, பை வடிகட்டி, ஈரத் தேய்ப்பான், உலர் தேய்ப்பான் என அடுத்தடுத்து அனுப்பப்பட்டு இறுதியாக விதிமுறைகளுக்கு உட்பட்டு உமிழ்வை வெளியேற்றும். திடக்கழிவு எரியூட்டியில் இருந்து சேகரிக்கப்படும் சாம்பலை செங்கல் தயாரிப்பு அல்லது கட்டுமானங்களில் பயன்படுத்தலாம். இதனை ஒரு பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற அலகு என்றே கூறலாம். 'பசுமை வளாகத்தை' நோக்கி சென்னை ஐஐடி மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகள்:

நீர் சேகரிப்பு: இக்கல்வி நிறுவன வளாகத்தில் மேற்கூரை, கூரை அல்லாத பகுதிகளில் இருந்து கிடைக்கும் 100 சதவீத மழைநீரும் சேகரிக்கப்பட்டு முறையே 165 மில்லியன் லிட்டர், 105 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.

கழிவு மேலாண்மை: இந்த வளாகத்தில் 100 சதவீத உணவுக் கழிவுகளும், இயற்கைக் கழிவுகளும் பயோகேஸ் ஆலைகள் மூலமாகவும், மண்புழு உரத் தயாரிப்பின் மூலமாகவும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகள் திறம்படக் கையாளப்படுகின்றன.

கழிவுநீர் சுத்திகரிப்பு: இக்கல்வி நிறுவன வளாகத்தில் உருவாகும் கழிவுநீரைச் சுத்திகரிக்க நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு கொண்ட அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கழிவுநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு கழிப்பறைப் பயன்பாடு, புல்தரை பராமரிப்பு, குளிரூட்டும் அமைப்பு போன்றவற்றுக்கு 100 சதவீதம் பயன்படுத்தப்படுவது, பொறுப்பான நீர் மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது.

பரந்துவிரிந்த பசுமை: மொத்தப் பரப்பளவில் 70% அளவுக்கு பிரம்மாண்டமாக அதாவது 16,48,939 சதுர மீட்டர் அளவுக்கு பசுமைத் தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வளாகத்தில் பிரமிக்கவைக்கும் அளவுக்கு 65,425 மரங்கள் ஓங்கி வளர்ந்திருப்பதால் சுற்றுச்சூழல் அழகியல் மேம்படுவதுடன் காற்றின் தரம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பங்களிப்பை வழங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

19 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

மேலும்