ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி வாய்ப்பு: செப்.12-ல் சென்னையில் கல்வி கண்காட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிப்புகள் குறித்த கல்விக் கண்காட்சி சென்னையில் செப்.12-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, தெற்காசியாவுக்கான ஆஸ்திரேலிய வர்த்தகம்,முதலீட்டு ஆணையர் மோனிகா கென்னடி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் 1,100-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு அதிகளவிலான இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக கல்விசார்பிரச்சார நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தாண்டு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆஸ்திரேலிய கல்விக் கண்காட்சி செப்.4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விசா பெறுவதற்கான வழிமுறை: அதன்படி சென்னையில் செப்.12-ம் தேதி நடைபெற உள்ள கண்காட்சியில் 26 முன்னணி பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இதில் மாணவர்கள் பங்கேற்று ஆஸ்திரேலிய பல்கலை.களில் உள்ள சேர்க்கை நடைமுறை, கல்விக்கட்டணம், உதவித்தொகை உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்வதுடன், சேர்க்கைக்கு முன்பதிவும் செய்து கொள்ளலாம். இதுதவிர விசா பெறுவதற்கான வழிமுறைகளும் விளக்கப்படும்.

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு உயர் கல்விக்காக 2022-ம் ஆண்டில் மட்டும் 72,031 பேரும், 2023-ல் (ஏப்ரல் வரை) 47,759 பேரும் சென்றுள்ளனர். இந்தஎண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்கும் என நம்புகிறோம். மேலும், மேலாண்மை, பொறியியல் படிப்புகளில் அதிகளவில் மாணவர்கள் சேருகின்றனர். இதுசார்ந்த கூடுதல் தகவல்கள் https://www.studyaustralia.gov.au/ எனும் தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையத்தின் தலைமைஅதிகாரி டி.வி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE